It gets curiouser and curiouser!

Monday 17 December 2012

நானுமோர் ஏழை!


நானுமோர் ஏழை!

ஏழைகள் என்பவர்கள் யார்?
அவர்கள்
அரசியல்வாதிகளின்
அடிமை அகல்களா?
இல்லை
எழுத்தாளர்களின் கட்டுரைப் பொருளா?

ஏழை என்பவன்
எழுச்சியே பெறாதவனா?
இல்லை
ஏமாற்றத்தையே பெறுபவனா?

ஏழை என்பவன்
பணத்தைப் பிச்சை வாங்கி
வறுமையை வாரிக் கொடுக்கும்
பிச்சைக்கார வள்ளலாகி விட்டானா?

ஏழை என்பவன்
பணம் இல்லாதவனா?
இல்லை
மனம் இல்லாதவனா?

ஒவ்வொரு மனிதனும்
ஒருவிதத்தில் ஏழைகளோ?

ஆம்

உண்மை காப்பவன் பாவத்திலே ஏழை
நேர்மை காப்பவன் நியாயத்திலே ஏழை
நன்மை நல்குபவன் எழுமையில் ஏழை
பான்மை கெட்டவன் தரணியில் ஏழை
வலிமை மிக்கவன் பொறுமையில் ஏழை
தனிமை வாழ்பவன் இன்பத்தில் ஏழை
புலமை மிக்கவன் வாய்மையில் ஏழை
பகைமை வளர்ப்பவன் பாசத்தில் ஏழை
அடிமை வாழ்பவன் சுதந்திரத்தில் ஏழை
ஒருமை போற்றுபவன் துன்பத்தில் ஏழை
பெருமை பெற்றவன் சாவிலே ஏழை

அடடா!
அப்போது இத்தேசத்தில்
யார் தானப்பா ஏழை?

கண்ணன் கூறுகிறான்
'மனதில் திருப்தியற்றவனே ஏழை!'



அடடா!
சாதுரியமான பதில்
ஆனால்
சிறந்த பதில்!

ஆனால்
இந்த பதில்
இந்தியாவை வறுமையெனும்
இக்கோட்டிற்கு கீழேயல்லவா
தள்ளி விடுகிறது?

நாம் இந்தியப் பெருநாட்டில்
சிலபல கோடிகளே ஏழைகளென
இத்தனை நாள் எண்ணியிருந்தோம்?

இன்று
கண்ணன் சொன்னதை
கருத்தில் கொண்டால்
ஒட்டுமொத்த இந்தியாவே
ஏழைகளின் புகலிடமாகுமே?

ஏனென்றால் எவருக்கும்
எச்சமயமும் திருப்தியேயில்லை

கொள்ளையடித்தது போதும்
கொன்றுகுவித்ததும் போதும்
இருப்பதைகொண்டு வாழ்வோமென
இங்கேயோர் அரசியல்வாதியுண்டா?
இல்லை
குறைகூறுவதும் போதும்
புலம்பித்தள்ளுவதும் போதும்
இருக்கின்ற ஆட்சியே இன்பமென
இங்கேயோர் குடிமகன்தானுண்டா?

மேன்மை வரவர
மேலும் கேட்கிறான்
மேலும் கிடைத்தப்பின்னர்
மீண்டும் கேட்கிறான்

எத்தனை கிடைத்தாலும்
பித்தமனம் புலம்பும்!
ஒன்றுமே இழக்காமல்
ஓவென அழுதுருகும்!

திருப்தி இல்லாதவன்
திருந்தப் போவதில்லையெனில்
திறமை வெளிப்படாமல்
திரும்பவும் பிறந்திடுவான்

சரி!
நாம் இருப்பதைக் கொண்டு
திருப்தி அடைவோம்
ஆனால்
ஒன்றுமே இல்லாதவனுக்கு
எதைக் கொண்டு திருப்தி?

அடடா!
இந்த நாட்டில்
கேடுகெட்ட பணத்தை
தேடிவைக்கும் திருப்தியற்ற
ஜீவன்கள் இருந்தாலும்

உண்ண உணவின்றி
உடுத்த உடையுமின்றி
இருக்க இடமுமின்றி
இறந்துபோகும் உயிர்களும்
உள்ளனவே?

அவர்கல்
எதைக் கொண்டு திருப்தி அடைவார்கள்?
மனிதனாய் பிறந்ததேதம்
மனதிற்கு திருப்தி என்றா?

எழைகளே!
நீங்கள் மேலும் பணத்தை
கேளுங்கள்!
உயிர்வாழ அது உதவும்வரை!

ஏனெனில்
பணமில்லாத ஏழையாக வாழ்வதைவிட
மனதில்திருப்தியற்ற ஏழையாக வாழ்வதுமேல்!

அடிப்படைத் தேவையை கேளுங்கள்
அதன்பின்னர் கிடைப்பதையெல்லாம்
கொடுத்திடுங்கள்!

ஏனெனில், நமக்கு

உலகில் வாழும் உரிமை உண்டு
உலகின் இன்பங்கள் உனர்வதற்கல்ல!
வேலை செய்ய உரிமை உண்டு
வேறதன் பயன்கள் அடைவதற்கல்ல!

முதலில்
பணமில்லா ஏழைகளெனும்
பரீட்சையில் தேர்ந்திடுவோம்
அப்போது தான்
கண்ணனின் கணக்கு
கவனத்திற்கு வரும்

ஏனென்றால்
எவ்வளவு பணம் இருந்தும்
திருப்தி இன்றி வாழ்பவன்
பின்னர்
எத்தனை பிறவி எடுத்தாலும்
முக்தி இன்றி வாடிடுவான்

சரி!
திருப்தியோடு வாழ்ந்திடுவோம்
திருந்தியினிமேல் வாழ்ந்திடுவோம்
அடடா!
எனக்கு
எழுதியது போதுமென
திருப்திகொள மனத்துணிவில்லை
அனுபவித்தது போதுமென
துறந்துவிட தைரியமில்லை

கண்ணா!
உன் கணக்கில்
நானும் ஏழையாய் இருக்கிறேன்

ஒன்று
எனக்கு திருப்தி கொடு!
இல்லை
என் ஆசைகளை பூர்த்தி செய்!

1 comment:

  1. migavum nandraga irundhadhu. Happy to see someone writing in tamil on such topics. Continue the good work. :-)

    ReplyDelete

Text Widget

Copyright © The Curious Cat | Powered by Blogger

Design by Anders Noren | Blogger Theme by NewBloggerThemes.com